பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிக்கை

தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிக்கை


பேராசிரியர் முனைவர் மு. முருகேசன் அவர்களது கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள் என்ற நூலினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

பார்வையற்றோர் பிறந்தது முதல் இந்த பார்வையுள்ள பொதுச் சமுதாயத்தில் எப்படியெல்லாம் போராட வேண்டியுள்ளது, எத்தனை எத்தனை வலிகளைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது போன்ற செய்திகளை அனுபவ     ஆதாரங்களுடன் பட்டியலிட்டு எடுத்துரைத்துள்ளார் நூலின் ஆசிரியர்.

இந்த நூலினை படிக்கும் பொழுது ஒரு புத்தகத்தை படிக்கிறோம் என்ற எண்ணம் சிறிதும் தோன்றவில்லை. மாறாக பார்வையற்ற நண்பர்கள் கூடி அனுபவங்களை பகிர்ந்துக்கொண்ட உணர்வே மேலோங்கியது. 


    
    

பொதுவாக இந்த சமூகம் பார்வையற்றோரைப் பார்த்து உங்களுக்கென்ன பார்வை இல்லை என்பதால் எல்லாம் எளிதாக கிடைத்துவிடுகிறது என்று கூறுவது வழக்கம். ஆனால், பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு என கல்வி கற்பதற்காக, கல்வி கற்கும் பாட புத்தகங்களை தங்களுக்கேற்ற வடிவில் உருவாக்குவதற்காக, தேர்வுகளை எதிர்கொள்வதற்காக, கல்வி தேர்ச்சி பெற்றபின் போட்டித் தேர்வுகளுக்காக, போட்டித் தேர்வுகளுக்கான தரவுகளைப் பெறுவதற்காக, பெற்ற தரவுகளை அனுகல் தன்மையுள்ளதாக மாற்றுவதற்காக, தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்காக, தேர்வுகளை எதிர்கொள்வதற்காக, சரியான பதிலி எழுத்தர் அமர்த்தப்படுவதற்காக, தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேர்வதற்காக, சேர்ந்தபின் தங்கள் இருத்தலை உணர்த்துவதற்காக, பணிகளை மேற்கொள்வதற்காக, மேலதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் தங்களை நிருபிப்பதற்காக, பணி நிறைவு பெறுவதற்காக, பயணம், காதல், திருமணம், உறவுமுறை, பிள்ளை வளர்ப்பு, குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்றல், சமூக ஈடுபாடு  என பல நிலைகளில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு, அடக்கப்படுதல், அலட்சியப்படுத்துதல், ஆதிக்கம் செலுத்துதல், இடர்விளைவித்தல், இட்டுக் கூறுதல், உதாசினப்படுத்துதல், உரிமை மறுத்தல், ஊழ்ப்பழி சுமத்துதல், ஊறு விளைவித்தல், எட்டிவைத்தல், ஏளனம் செய்தல், ஒடுக்கப்படுதல், ஒதுக்கப்படுதல், ஒருமையில் விளித்தல், கலகம் கற்பித்தல், புறக்கணித்தல் போன்ற பல்லாயிரக்கணக்கான போராட்டங்களை எதிர்கொண்டு அளவில்லா வலிகளையும் வேதனைகளையும் பார்வையற்ற ஒவ்வொருவரும் அனுபவித்து வருவதை இன்நூல் பலருடைய வாழ்வின் வழியே விளக்குகிறது. அதே நேரத்தில் பார்வையற்றோருக்கு இந்த காட்சி சமூகம் எப்படியெல்லாம் உறுதுணையாக இருந்துள்ளது என்பதையும் ஆங்காங்கே சுட்டியுள்ள குறிப்புகள் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது. 

ஆசிரியர் தங்களது பார்வையற்ற சமூகம் வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை அடைந்துள்ளது என்பதை இந்த பொதுச் சமூகத்தில் தனது நூலினை குற்றப் பத்திரிக்கையாக சமர்ப்பித்துள்ளார்.

ஆசிரியர் குற்றம் என்று சுட்டும் ஒவ்வொன்றும் சட்டப்படியும் குற்றமாக கருதப்படுவதை ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 2016 அத்தியாயம் 16 பிரிவு 92 உறுதிப்படுத்துகிறது.

92.1. பொதுவெளியில் ஊனமுற்ற நபர்களை எந்த இடத்திலும் வேண்டும் என்றே அவமதித்தல் அல்லது வேண்டும் என்றே அவமானப்படுத்தும் நோக்கத்துடன் மிரட்டுதல்.

92.2. ஊனமுற்ற நபரை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதல் அல்லது பலவந்தப் படுத்துதல் அல்லது ஊனமுற்ற பெண்களை மானபங்கப்படுத்துதல்.

92.3. ஊனமுற்ற நபர்களை தங்களின் கீழ் வசப்படுத்தி அல்லது கட்டுப்படுத்தி வேண்டுமென்றே அல்லது தெரிந்தே உணவு அல்லது திரவபொருள் கொடுக்க மறுத்தல்.

92.4. ஊனமுற்ற குழந்தை அல்லது பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலை மற்றும் அந்நிலையை பயன்படுத்தி பாலியல் ரீதியாக சுரண்டுதல்.

92.5. ஊனமுற்ற நபரை வேண்டுமென்றே காயப்படுத்துதல் அல்லது கால் அல்லது உணர்வு அல்லது ஆதரவு கருவிகளைச் சேதப்படுத்துதல் அல்லது பயன்பாட்டில் தலையிடுதல்.

போன்ற செயல்பாடுகளுக்கு ஆறு மாதத்திற்கு குறையாத ஆனால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த சட்டத்தின்படி புகார் வழங்கினாலும் இந்த காட்சி சமூகத்தில் நீதி கிடைப்பதற்குள் அவை பல வகையில் திரிக்கப்பட்டு நீர்த்து போய்விடுகிறது. 

எனவே இந்த புத்தகத்தை அதாவது இந்த குற்றப் பத்திரிக்கையை படிக்கும் ஒவ்வொரு பார்வையுள்ளவரும் பார்வையற்றவரும் தங்கள் மனதளவில் உணர்ந்தால் மட்டுமே சம உரிமை, சம வாய்ப்பு, முழு பங்கேற்பு சாத்தியமாகும்.

பேராசிரியர் முனைவர் முருகேசன் அவர்களைத் தொடர்புக்கொள்ள

9962445442

நன்றி.

சேதுபாண்டி

 

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

வங்கிப் பணிக்காக காத்திருக்கும் பார்வையற்ற பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு அறிவிப்பு


வங்கிப் பணிக்காக காத்திருக்கும் பார்வையற்ற பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு.

IBPS (Institute of Banking Personnel Selection) தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் க்லார்க் பணிக்கான தேர்வினை அறிவித்துள்ளது.

இதில் தமிழ்நாட்டில் உள்ள  பார்வையற்ற பட்டதாரிகளுக்கு 9 பணியிடங்கள்  ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு முதல் வங்கி க்லார்க் பணிக்கான தேர்வினை தமிழிலேயே எழுதலாம்.

பார்வையற்றோருக்கான வயது வரம்பு தளர்வு விவரம்:

பொதுப்பிரிவு 10 ஆண்டுகள்.

OBC பிரிவு 13 ஆண்டுகள்.

SC/ST பிரிவு 15 ஆண்டுகள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.10.2021

https://ibpsonline.ibps.in/crpcl11jun21/

பார்வையற்ற பட்டதாரி பணி நாடுனர்களுக்கு வாழ்த்துக்கள்

 

வியாழன், 28 மே, 2020

சுலுந்தி


வர சித்திரமாசம் அம்மாவாச அந்னைக்கு மாடனுக்கும் வங்காரனுக்கும் கன்னிவாடி அரண்மன எல்லையில மல்யுத்தம் நடக்கப்போகுதுனு கிணிங்கிட்டி அடிச்சு அறிவிக்கப்படுது. அத கேட்ட ஒருத்தன் என்னப்பா கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லேனு கேட்குறான். அவனும் சரி சொல்லுறேனு கிணிங்கிட்டிய நிறுத்திட்டு, நம்ம கன்னிவாடி அரண்மன நாவிதன் ராமன். அவன் செத்து ரொம்ப வருஷமாச்சு. அவனோட மகன்தா இந்த மாடன். இவன் யாருக்கும் செரைக்க மாட்டானாம். கத்திய முகத்துக்கு நேரா செரச்சாமாதிரி காட்டிட்டு கூலிய கேக்குறானாம். என்கூட யார வேணும்னாலும் மோத வரச்சொல்லுங்க. நா அவங்கக்கிட்ட தோத்தா செரைக்கிற வேலைய நா செய்வேன் இல்லனா தோத்தவங்க செரைக்கிற தொழில செய்யனும்னு அரண்மனையார் முன்னாடியே சவால்விட்டிருக்கான். இப்படியாக சுலுந்தி கதைத் தொடங்குது. இந்த மாடன் எதுக்காக இப்படி சவால்விடுறான், இறுதியில மல்யுத்தத்துல ஜெயிக்கப்போவது யாரு, நடந்தது என்ன ங்குறத  சொல்லி கதை முடியுது.
இந்த நாவலுக்கு பெயராக அமைந்திருக்குற சுலுந்திங்குற சொல் நாவலோட முக்கியத்துவத்த சொல்லக்கூடியதா இருக்கு. சுலுந்திங்குற குச்சில தீய கொளுத்துனா அனையாம நின்னு எரியும். அதுனால அந்த காலத்துல அடுப்பு கொளுத்துரதுல இருந்து கொல்லி வக்கிற வரைக்கும் இத பயன்படுத்தி வந்திருக்காங்க. அதுமட்டுமில்லாம நிலத்துல பள்ளமெடுப்பதுல இருந்து போராயுதம்குற வர எல்லா நிலையிலும் இந்த சுலுந்தி குச்சிய பயன்படுத்தி இருக்காங்க. இந்த குச்சிய போலவே அந்த காலத்துல நாவிதர்கள் பல நிலையில பல்வேறு காரணங்களுக்காக பல வகையில பயன்படுத்தப்பட்டிருக்காங்கங்குறது இந்த நாவல் மூலமா தெரிய வருது. நாவிதர்கள் சவரம் செய்வதற்கு மட்டுமில்லாம, பண்டுவம் பார்ப்பது முதல் அரண்மனைக்கு எதிரானவங்கள பழித்தீர்ப்பது வரைனு எல்லா நிலையிலும் பயன்படுத்தப்பட்டிருக்காங்க.
இந்த நாவலுல மாடனோட அப்பா ராமன் அரண்மன நாவிதனா இருக்கான். அவன் மிகப்பெரிய பண்டுவனா இருந்தான். அவன் குதிரை ஏற்றம், மல்யுத்தம், வேட்டையாடுதல், சமயல் என பல்துறை வித்தகனாக இருக்கான். இப்படி பல வித்தைகள கத்துருக்க ராமன் எப்படி நடத்தப்படுறாங்குறத ஆசிரியர் தெளிவா எடுத்துரச்சிருக்காறு. சித்தர வணங்கி பண்டுவம் கத்துக்கிட்ட ராமன் பேயுமில்ல பூதமுமில்லங்குற கருத்த சொல்லுறதா பதிவு செஞ்சி மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வச்சிருக்காறு. இந்த நாவலுல வரலாற்று செய்திகளுக்கும், மருத்துவ குறிப்புகளுக்கும், சொலவடைகளுக்கும் பஞ்சமே இல்ல. எல்லா நாவலபோல போகுற போக்குல படிச்சிட முடியாது. நா படிக்க தொடங்கும்போது ரொம்ப சுனக்கமா இருந்துச்சு. படிக்க படிக்க ஆசிரியரோட நடை, கதையோட ஓட்டம், செய்திகள் என எல்லாத்தயும் உள்வாங்க வாசிப்பு சூடுப்பிடிச்சுது. அதுநாள இத யாரும் ஒரு பொழுது போக்கு நாவலா நினச்சிட வேண்டாம். பல்துறை செய்திகள் இதுல கொட்டிக்கிடக்கு. நிச்சயமா ஆசிரியர் இதுக்காக பல ஆண்டுகள் உழச்சிருக்கனும். இத ஒரு சித்த மருத்துவ நூலுனு சொன்னா மிகையாகாது. இறுதியா இந்த நாவலுல இருந்து ஒரு விஷயத்த சொல்லி முடிச்சுடுறேன்.
பண்டுவனான நாவிதன் ராமன் தன்னோட வீட்டுல நெருப்புமூட்டி மருந்து தயாரிக்கிறான். திடீருனு மருந்துப் பொருட்கள் கவிழ்ந்து விழுந்து கலந்து நெடியேறி தீப்பிடிச்சுடுது. இதுல அரண்மனை நாவிதன் ராமன் இறந்துடுறான். ராமனோட மனைவியும் அரண்மனை மருத்துவச்சியுமான வல்லத்தாரைக்கு கண் தெரியாம போயிடுது.
·         கண் தெரியாத வல்லத்தாரை நிதானத்துலயே சமயல் செய்யுறா.
·         மன உளைச்சலால செய்வதறியாது யாசகம் கேட்டு வயித்த கழுவிக்கிறா.
·         மாடனுக்கும் வங்காரனுக்கும் மல்யுத்தம்னு கேள்விப்பட்டு சனங்க  போகுற திசை நோக்கி குரல் கேட்டு ஓடி விழுந்து எழுந்து முட்டி மோதி இடத்த அடையுறா.
·         மல்யுத்த இறுதியில செத்தான் மாடன் என்ற சனங்களோட குரல் கேட்டு கதறி அழுது சத்தமில்லாம கிடக்குற மகன தேடி அலையுறா. அப்ப மாடன்கிட்ட வளர்ந்த நாயி அவளோட சேலைய கவ்வி இழுத்துக்கிட்டுபோயி மாடன் கிட்ட விடுது.
·         கண் தெரியாத வல்லத்தாரை வழிகாட்டுதல் இல்லாம தன்னந்தனியா பழக்கத்துனால பாக்குறவங்க திகைத்து போறமாரி வேகவேகமா அரண்மனைய நோக்கி விரைந்து நடந்து போறா.
இப்படி கண் தெரியாத வல்லத்தாரய நாவலுல படைச்சிருக்க ஆசிரியருக்கு பாராட்டுக்கள். கண் தெரியல நாளும் புத்தியும் உணர்ச்சியும் மத்தவங்கள போலத்தானு பதிவு செஞ்சிருக்காறு. கண் தெரியலனாலும் சமைக்க முடியும். பார்வையற்றவங்க அடி எண்ணி நடப்பதா பலரும் நினைச்சிருக்குற நேரத்துல அவங்க பழக்கத்தால இயல்பாகத்தான் நடக்குறாங்கங்குறது பதிவு செய்யப்பட்டிருக்கு. வல்லத்தாரய நாய் கூட்டிக்கிட்டு போய் விடுதுங்குற சூழல் மேலை நாட்டுல பார்வையற்றோருக்கு வழிகாட்ட நாய்கள் பயன்படுத்தப்படுவத நினைவூட்டுது.
இப்படியாக பலதரப்பட்ட சிந்தனைகளையும், தரவுகளையும் தன்னகத்தே வைத்துள்ள சுலுந்தி ஒரு நாவலல்ல. இது ஒரு ஆய்வு புத்தகம். இத்தகய புத்தகத்தை படைத்து பல அறிய தகவல்களைச் சமுதாயத்திற்கு அறியத்தந்த ஆசிரியர் முத்துநாகு ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
நன்றி.

ஐயையோ நான் குருடாயிட்டேன்!


நா இப்ப படிச்சி முடிச்ச புத்தகத்தைப் பத்தி எல்லாருக்கிட்டையும் சொல்லிடனும்னு மனசு துடிச்சிது. அதுனாலதான் இதை எழுதுறேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி வீரயுக நாயகன் வேள்பாரி என்ற நாவலைப் படிச்சிட்டிருந்தேன். இல்ல இல்ல அந்த நாவலில் மூழ்கிட்டிருந்தேனுனுதான் சொல்லனும். அந்த நேரத்துலதான் பேராசிரியர் முனைவர் சிவராமன் ஐயா தொலைப் பேசியில அழைச்சாரு. சொல்லுங்க சார் எப்படி இருக்கிங்கனு கேட்டுட்டு உடனே வேள்பாரி நூல் பத்தி மகிழ்ச்சியோட சொல்ல தொடங்கிட்டேன். நானும் அந்த நாவல் பத்தி கேள்விப்பட்டேன் இப்ப படிச்சிக்கிட்டிருக்கிறத முடிச்சிட்டு அத படிக்கனும்னு சொன்னார். சரி சார், நீங்க இப்ப என்ன புத்தகம் படிக்கிறிங்கனு கேட்டேன். நா இப்ப ப்லைன்ட்நஸ் என்ற ஆங்கில நாவலைப்படிச்சு முடிச்சிட்டு அதே ஆசிரியர் எழுதிய சீயிங் என்ற நாவலைப்  படிச்சிக்கிட்டிருக்கேன்.  போர்த்துக்கீசியத்துல இருந்து மொழிப்பெயர்க்கப்பட்டது. இந்த ரெண்டு நாவலும்  ரொம்ப சுவாரசியமா இருக்குப்பா. அப்படியா சார், ப்லைன்ட்நஸ் நாவல்னா அது பார்வைத்தெரியாதவங்கள பத்தி பேசுதா சார்? அட ஆமாம்பா இந்த நாவல் தொடக்கத்துல கார் ஓட்டிக்கிட்டு வந்த ஒருத்தன் சிக்னல்ல நிக்கும்போது கண்ணுத் தெரியாம போயிட்றான். அவனுக்கு உதவ ஒருவன் வந்து அவன அவன் வீட்டுல கொண்டுபோய் விட்டுட்டு, திரும்பும்போது அவன் கார ஆட்டயப் போட்டுட்டு போறான். அவனுக்கும் கண்ணு தெரியாம போயிடுது. முதல்ல கண்ணுத் தெரியாம போனவ டாக்டர்கிட்ட போறான். தொடர்ச்சியா டாக்டருக்கும் கண்ணுத் தெரியாம போயிடுது. ஐயையோ! என்ன சார் இது அப்ப மொத்தமா எல்லாருக்கும் கண்ணுத் தெரியாம போயிடுமா சார். அப்படித்தான் கத போகுது. இந்த கத இப்ப கொரோனா சூழலுக்கு பொருத்தமான கதையா இருக்கு. நிச்சயமா நாம இத சிந்திக்கனும். அந்தகக்கவிப் பேரவையில நா இந்த நூல அறிமுகப்படுத்துறேன் எல்லாருக்கும் இது தெரியனும். நிச்சயமா சார். இந்த கூட்டம் முடிஞ்சிடட்டும் அடுத்தக் கூட்டத்துல நீங்க இந்த புத்தகத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தனும்னு கேட்டுக்கிட்டேன். சரிப்பா நிச்சயமாக பண்ணிடலாம்.
அவர்க்கிட்ட பேசி முடிச்ச சில நாட்களுல விரல்மொழியர் மின்னிதழின் வாட்ஸப் குழுமத்துல பாரதி புத்தகாலயம் வெளியிட்ட பார்வை தொலைத்தவர்கள் என்ற புத்தகம் குறித்த செய்திய யாரோ பதிவிட்டிருந்தாங்க. அடடா ப்லைன்ட்நஸ் புத்தகம் பார்வை தொலைத்தவர்கள் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் இருக்குனு அறிஞ்சதும் மனசு நிஜமாகவே மகிழ்ச்சியா இருந்துச்சு. அந்த புத்தகத்த ஒரு நண்பர்க்கிட்ட கேட்டேன் அவரும் உடனே குடுத்தார். படிக்க ஆரம்பிச்சேன்.
பார்வை தொலைத்தவர்கள் யோசே சரமாகோ என்ற போர்த்துகீசிய நாவலை ப்லைன்ட்நஸ் என்ற ஆங்கில மொழிப்பெயர்ப்பில் இருந்து சங்கரநாராயணன் என்பவர் தமிழில மொழிப்பெயர்த்திருக்காறுனு தெரிஞ்சிக்க முடிஞ்சுது. அதுமட்டுமில்லாம 1998ஆவது வருஷம் இதுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசும் குடுத்துருக்காங்கனு தெரிஞ்சிது. கதைய சிவராமன் சார் ஏற்கனவே ஓரளவு சொல்லி இருந்ததால நா சில எதிர்பார்ப்போடு கதைய படிக்க ஆரம்பிச்சேன். ஆனா நா யூகிச்சமாரி அந்த கத போகல. பலவித சூச்சுமங்கள அது சொல்லி போனுச்சு. குருடு என்ற தொத்து நோய் பரவத்தொடங்குது. அது மிகத்தீவிரமா பரவுது. நோய் குறித்து தொடக்க நிலயிலயே அறிந்த அரசு குருடான நோயாலிகளைத் தனிமைப்படுத்த திட்டமிடுது. தீவிர ஆலோசனைக்கு அப்பரம் தனிமைப்படுத்த நீண்டநாள் பயன்பாட்டுல இல்லாத ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிய தேர்ந்தெடுத்து அதுல நோயாலிகள தனிமைப்படுத்துது. நோய் தொத்து இருக்கும்னு கண்டறியப்பட்ட அறிகுறிக்காரங்களையும் அங்கயே வேர வார்டுல தனிமைப்படுத்துது. குருடானவங்க கண்களுக்கு எல்லாமே ஒரு வெண்மைப் படலமா தெரியுது. அதுனால அந்த நோயிக்கு வெண்மை நோயினு பெயரிடப்படுது. தனிமைப் படுத்தப்பட்ட பைத்தியக்கார ஆஸ்பத்திரி பாதுகாப்புக்கு ராணுவத்த நியமிக்கிது. ஆஸ்பத்திரிக்குள்ள இருந்து யாராவது வெளிய வந்தா சுட்டுப்போட உத்தரவு கொடுக்கப்படுது. உணவு கொடுக்க உத்தரவு கொடுக்கப்படுது. நாளடைவுள உணவு போதுமான அளவு இல்ல. குறிப்பிட்ட நாளுக்கு அப்புரம் உணவு வருவதே நின்னுப்போயிடுது. உள்ள பயன்படுத்தி குப்பையான பொருள்கள உள்ளயே கொளுத்திடனும்னு உத்தரவு கொடுக்கப்படுது. யாராவது செத்துப்போனா உள்ளயே புதைச்சிடனும்னு சொல்லப்படுது. இந்த உத்தரவுகளெல்லாம் ஒவ்வொரு நாளும் நினைவூட்டப்படுது. இதெல்லாம் வெண்மை நோயால பாதிக்கப்பட்டு திடீரென குருடான கூட்டம் செய்ய வேண்டியிருக்குங்குறத நினச்சிக்கூட பாக்க முடியாது.
அந்த ஆஸ்பத்திரி நீண்டநாலா பயன்படுத்தப்படாததுநாள எந்த அடிப்படை வசதியும் சரியா இல்ல. உள்ள வந்து யாரும் சரிசெய்து தரவும் வாய்ப்பு இல்ல. இப்படியாக கதை நகருது. தனிமைப் படுத்தப்படும் குருடான நோயாளிகளோட எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகுது. ஆஸ்பத்திரியே போதும்போதுனு அலருர அளவுக்கு நோயாளிகள் வந்து சேந்தாங்க. அந்த ஆஸ்பத்திரி குருடான மனிதர்களைவிட மனித கழிவுகளாலையும், துர்நாற்றத்தாலையும் நிறஞ்சி இருந்துதுனு சொல்லலாம். இந்த கதையோட இறுதியில நாட்டிலுள்ள எள்ளாருக்கும் கண் தெரியாம போயிடும். இறுதி அத்யாயங்களுல இந்த நோய் தானாக சரியாகி கண் தெரிஞ்சிடும். நாடே குருடான நிலையில நோய் தொற்றால பாதிக்கப்பட்ட ஒரு கண் டாக்டரின் மனைவி மட்டும் குருடாக மாட்டாங்க.
வெண்மை நோயால தாக்கப்பட்டு புதிதாக குருடான குருட்டுக் கூட்டம் எப்படி வாழ்க்கைய எதிர்கொள்ளுது, குருட்டுக்கூட்டத்தில் தோன்றிய திருட்டுக்குருட்டுக் கூட்டத்திலிருந்து தங்கள காத்துக்க எப்படி போராடுது, உணவுக்காக, நீருக்காக எப்படியெல்லாம் அலஞ்சு திரிய வேண்டியிருக்கு உள்ளிட்ட நிறைய பிரச்சனைகளை கதை சொல்லி போகுது. குருடனே குருடனுக்கு ஆப்பு வைக்கிறான், குருட்டு கம்னாட்டி கம்யுனிட்டி என்ற தொடர்களை கதைக்கு இடையில பாக்கும்போது எனக்கு கொஞ்சம் மனசு வலிக்கதான் செஞ்சுது. சில சூழ்நிலைகள் ரசிக்கத்தக்கதாகவும் இருந்துச்சு. இந்த நாவலுல பல இடங்கள படிக்கும்போது மனசுக்குள்ள ஏதோ கடபாறைய வச்சு இடிக்கிறாமாதிரி வலி ஏற்பட்டுச்சு. நா முன்னாடியே படிச்சிருந்த வீரயுக நாயகன் வேள்பாரியும், இப்போது படிச்சு முடிச்சிருக்குற பார்வை தொலைத்தவர்கள் என்ற இந்த நாவலும் ஏதோ ஒரு கோட்டில் பயணித்து ஏறக்குறைய ஒத்துப்போகுறமாதிரி ஒரு கொள்கைய வலியுறுத்துவதாக உணருறேன். எல்லோரும் இந்த நூலை அவசியம் படிக்கனும்னு கேட்டுக்குறேன். இதுல ஏதாச்சும் பிழை இருந்துச்சுனா பொருத்துக்குங்க. படிச்சத பகிர்ந்துக்கனும்னு தோனுச்சு அதுனால உடனே எழுதிட்டேன்.
யோசே சரமாகோ எழுதிய ப்லைன்ட்நஸ் உள்ளிட்ட நான்கு நாவல்களைப் படித்து முடித்துள்ள பேராசிரியர் சிவராமன் சார் 27 மே 2020 அன்று புதிய பனுவல் ஆய்வு வட்டம் ஜூம் அரங்கில் அது குறித்து கட்டுரைப் படிக்கிறார். கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடுவோம்.
நன்றி.

புதன், 15 ஏப்ரல், 2020

விந்தையாளன் வேள்பாரி!


வீரயுக நாயகன் வேள்பாரி

கொரோனா ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து செல்பேசி, கணினி என பொழுதுகள் கழிந்தன. வாசிப்பு மிக பிடித்திருந்தாலும் எதை வாசிப்பது, நாவல்களை வாசித்தால் முழுமையாக வாசித்து முடித்துவிட முடியுமா என்ற கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. ஏறக்குறைய பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பு வாசிப்பை நேசித்து எப்பொழுதும் ஏதேனும் ஒரு புத்தகத்தைப் படித்து அதன் சுவையை நண்பர்களுக்கு எடுத்து சொல்லும் நண்பர் தமிழ் பட்டதாரி ஆசிரியர் ராமன் அவர்களோடு செல்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது வேள்பாரி குறித்தும், கடந்த இரண்டு ஆண்டுகளில் புத்தகக்காட்சியில் அதன் விற்பணைக் குறித்தும்,  இலக்கிய ஆர்வலர்கள், தமிழ் ஆய்வாளர்கள், பேச்சாளர்கள், பல்துறை அறிஞர் பெருமக்கள் என அனைவரும் இன்நூலின் பெருமையை வியந்து புகழ்ந்து வரும் விதம் போன்றவற்றை மிகுந்த ஆர்வத்துடன் எடுத்துரைத்தார். இப்படிப்பட்ட நூலினை நான் கேள்விப்பட்டேனா அல்லது கேட்டிருந்தும் கடந்து சென்றேனா என்று தெரியவில்லை. உடனே அந்த நூலினை அவரிடமிருந்து வாங்கினேன். படிக்க தொடங்கிய உடனேயே வரிகள் அதற்குள்ளே பயணிக்க இழுத்து சென்றது. படிக்க படிக்க அதிசயம் ஆச்சரியம் என்று உள்ளத்தின் வார்த்தைகள் மேல் எழுந்தது. காலை, மாலை, இரவு என வாசிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. உணவு உண்ணும் பொழுதுகள் கூட கனவு போல் கடந்து சென்றது. கனவிலும் வேள்பாரி நினைவென மலர்ந்தது. வாசித்த வரிகளும் வார்த்தைகளும் உயிர்பெற்று பல பொருள்கள் தந்து சென்றன. சற்றே அசந்தால் தொடர் பிடிபடவில்லை. பொருளறிய மீண்டும் பின்னோக்கி வரிகளுக்குள் வா என்று அழைத்தன தொடர்கள். படித்தேன், திகைத்தேன், சிரித்தேன், அழுதேன், வியந்தேன், நிறைந்தேன் மலைத்தேன், குடித்தேன் திகட்டவில்லை. அப்பப்பா! வீரயுக நாயகன் வேள்பாரியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
பாரி என்பவனை வள்ளலாகவும், கபிலரின் நண்பனாகவும் மட்டுமே அறிந்த தமிழ்ச் சமூகத்திற்கு பல்துறை வித்தகனாக படம்பிடித்துக் காட்டுகிறார் நூலின் ஆசிரியர். பரம்புநாடும் பச்சைமலையும் அதனைச் சுற்றியுள்ள குன்றுகளும், ஊர்களும் இயற்கை வளங்களும் பல செய்தியைச் சொல்லி செல்கின்றன. அறிவுகளைப் பகுத்த தொல்காப்பியர் பச்சைமலைத் தொடரைத் தொடர்ந்து ஆய்ந்து இயற்றியதுவோ ஒற்றறிவதுவே என்று எண்ணத்தோன்றுகிறது. சங்க இலக்கியத்தின் சாறு பிழிந்து பருக பணித்திருக்கிறார் படைப்பாளர். கதையின் தொடக்கத்தில் இருந்து பாரி வருவான் என்று சொல்லி அழைத்து செல்லும் ஆசிரியர் பாரியின் வரவிற்கு பிறகு பரம்பின் குரல் ஒலிக்கும் என்று சொல்லி முன்னோக்கி அழைத்து செல்கிறார். கதைகளில் வரும் நத்தை உள்ளிட்ட பூச்சிகள், பாம்பு வகைகள், ஆட்கொல்லி மரம், மங்கையர் மணம் முகர்ந்து மலரும் மரம் உள்ளிட்ட மரங்கள்,  இராவெரிச்செடி, காக்கா விரிச்சி போன்ற பறவைகள், விருந்தாகும் அறுவதாங்கோழி உள்ளிட்ட உயிரிணங்கள், தேவ வாக்கு சொல்லும் விலங்கு உள்ளிட்ட விலங்குகள், திரையர்கள், காடர்கள் உள்ளிட்ட வலிமை மிக்க மணிதர்கள், மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட போர்வை, மூலிகைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட வீரர்களுக்கான கவசங்கள், பூச்சிகளையும், யானைகளையும், காற்றையும் காற்றியையும் போருக்கு பயன்படுத்திய விதம், எரியும் பச்சைச் செடி, அடைமழையிலும் அனையாத தீப்பந்தங்கள், பழையன், வாரிக்கையன், தேக்கன் போன்ற வயது மூத்தவர்களின் செயல்பாடுகள், வானை மிஞ்சும் அறிவைக் கொண்ட பேராசான் திசைவேலர், பெரும்புலவர் கபிலர், முருகன் வள்ளி காதல், ஆதினி, மயிலா, அங்கவை, பொற்சுவை போன்ற பெண்களின் அறிவுக்கூர்மை, நீலன், இறவாதான் உள்ளிட்ட வீரர்களின் துடிப்பு, தளபதிகளின் தந்திரம், அமைச்சர்களின் செருக்கு, மூவேந்தர்களின் சூழ்ச்சி, பாரியின் மாட்சி என அத்தனையும் வியக்க வைக்கிறது. இந்த நூலினைப் படிக்கும் போது கதைகளினூடே வந்த இறைவழிபாடு சித்திரைத் திருநாளில் எங்கள் குலதெய்வ வழிபாட்டை நினைவுப் படுத்தி சென்றது. ஈடு இணை இல்லா இந்நூல் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய இயற்கையின் இரகசியம்.
இதனை எழுதிய சு.வெங்கடேசன் ஐயா அவர்கள் பல மணி நேர தூக்கத்தைத் துரந்து, நூற்றுக்கணக்கான நூல்களைப் படித்து, ஆயிரக்கணக்கான நாட்களைக் கடந்து உழைத்திருப்பது நூலில் புலனாகிறது. கண் பார்வையற்றோர் வாசிக்க உதவும் மென்பொருள் துணைக்கொண்டு பார்வையற்ற நான் மனதில் பல காட்சிகளை உருவகப்படுத்தி வாசிக்க ஏதுவாக இருந்தது எழுத்தாளரின் வரிகள். ஓவியர் ம.செ அவர்களின் ஓவியம் கதைகளின் நகர்வை எத்தனைச் சிறப்பாக காட்சிப் படுத்தியிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.
நூலினைப் படித்துக் கொண்டிருக்கும்போது செல்பேசி மூலமாக பேசிய முருகேசன் ஐயா அவர்கள் படியுங்கள் உங்களுக்கு மெய்சிலிர்ப்புகளும், வியப்புகளும் காத்திருக்கிறது என்று மேலும் ஆர்வத்தைத் தூண்டினார். தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் தம்பி தங்கை லட்சுமிநாராயணன் வத்சலா நாங்கள் படிக்க தொடங்கிவிட்டோம் மிக அருமையாக இருக்கிறது நீங்கள் படியுங்கள் என்று மேலும் ஆர்வத்தைத் தூண்டினர். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன். இந்த நூலினை வாசிக்க வழங்கிய ராமன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைவரும் விரைந்து படியுங்கள் பல விந்தைகளை உணருங்கள்.
நன்றி.

திங்கள், 24 ஜூன், 2019

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (PGTRB) பணி இடங்களில் பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வையுடையோருக்கான ஒரு சதவிகித இட ஒதுக்கீட்டு (a) Blindness and Low vision – 1% Reservation விவரம்


முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில் பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வையுடையோருக்கான ஒரு சதவிகித இட ஒதுக்கீட்டு (a) Blindness and Low vision – 1% Reservation விவரம்


முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில் பார்வையற்றோருக்கு எந்தெந்த பாடங்களில் எவ்வளவு பணி இடங்கள் உள்ளன என்பதை அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள  அறிவிப்பின்படி, நமக்கான பணி இடங்கள் குறித்த எனது புரிதலில் பணி இடங்களைப் பட்டியலிட்டுள்ளேன். பிழைகள் இருப்பின் சுட்டுங்கள் அறிந்துக்கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்.

பின்னடைவு காலி பணி இடங்கள் 336.


பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வையுடையோருக்கான பின்னடைவு காலி பணி இடங்கள் 10.

விவரம் பின்வருமாறு.

Gt  தமிழ் 3.

Gt ஆங்கிலம் 2.

Gt பொருளியல் 5.

தற்போதய பணி இடங்களில் ஊனமுற்றோருக்கான பணி இடங்கள் 134.


பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வையுடையோருக்கான பணி இடங்கள் 35.

விவரம் பின்வருமாறு.

பாடவாரியாக மொத்த பணி இடமும், பார்வையற்றோருக்கான பணி இடமும் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பாடத்தில் எந்த பிரிவினருக்கு எத்தனை பணி இடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்   245. -  5.


Gtw 1.

Bc 1.

Mbc /dnc 1.

Sc 1.

St 1.

ஆங்கிலம் 206 -  4.


Gt 1.

Bcw 2.

Mbc/dnc 1.

கணிதம் 266 3.


Gt 1.

Bcw 1.

Mbc/dnc 1.

இயற்பியல் 190 -  4.


Bcw 1.

Bc 1.

Sc 1.

Scw 1.

வேதியியல். 215 4.


Bcw 1.

Bc 1.

Sc 1.

Scw 1.

தாவரவியல் 142 2.


Bc 1.

Mbc/dnc w 1.

விலங்கியல் 135 2.


Bc 1.

Mbc/dnc w 1.

வரலாறு 51 2.


Bc 1.

Mbc/dnc w 1.

பொருளியல் 98 4.


Gt 1.

Bc 2.

Scw 1.

வணிகவியல் 83 4.


Gt 1.

Bc 1.

Sc 1.

Scw 1.

உடற்கல்வி 14 1.


Mbc/dnc 1.

மொத்தம் 35


மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் பிழை இருப்பின் பொருத்தருள வேண்டுகிறேன். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், நான்கு சதவிகித இட ஒதுக்கீடு மற்றும் அடையாளம் காணப்பட்ட பணி இடங்கள் போன்றவற்றை பின்பற்றி இருப்பதை அறிய முடிகிறது. அதே நேரத்தில் இட ஒதுக்கீடு மற்றும் அடையாளம் காணப்பட்ட பணி இடங்கள் முறையாக கையாளப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது நம் அமைப்புகளின் கடமை.

நன்றி.

 

திங்கள், 21 மார்ச், 2016

தம் வாசிப்பாளருக்கு பாராட்டு விழா நடத்திய பார்வையற்ற பேராசிரியர்!


தம் வாசிப்பாளருக்கு பாராட்டு விழா நடத்திய பார்வையற்ற பேராசிரியர்!

வைணவ கல்லூரியின் கணித பேராசிரியர், பை கணித மன்றத்தின் நிறுவனர் ரா.சிவராமன் என்கிற ராம்ஜி அவர்கள் எழுதிய கட்டுரைகள்,  அவர் விருது பெற்றது தொடர்பாக தமிழ் இந்து தினமணி போன்ற நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள் என பல்வேறு செய்திகள் நம் குழுமத்தில் பகிரப்பட்டு, அனைவரும் படித்திருக்கிறோம். அத்தகு சிறப்பு மிகுந்த பேராசிரியருக்கு தற்போது சமூகத்தில் உள்ள கடைநிலை மக்களுக்கும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக இந்திய அரசு தேசிய விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

பல விருதுகளுக்கு சொந்தக்காரரான  இவருக்கு தற்போது தேசிய விருது கிடைத்திருப்பது இவரால் பயனடைந்து வாழ்வில் உயர்ந்துள்ள பல பார்வையற்றவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக பார்வையற்றவர்களுக்கு விழியாக இருந்து வழிக்காட்டி வருகிறார் என்று சொன்னால் மிகையாகாது. இவர் குடும்பமே பார்வையற்றோருக்காக பாடங்களைப் படித்துக்காட்டி சேவைப்புரிந்துள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது. இப்படி சேவைப்புரிந்து வரும் இவரால் வழிக்காட்டப்பட்டு இன்று பேராசிரியராக உயர்ந்துள்ள மாநிலக்கல்லூரி பேராசிரியர் கெ. குமார் ஐயா அவர்கள் இவருக்காக இன்று எக்மோரில் உள்ள ஜீவன் ஜோதியில் பாராட்டு விழா நடத்தி ஐயாவை சிறப்பித்தார்கள்.

இவ்விழாவில் மாநிலக்கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் அர. ஜெயச்சந்திரன்  அவர்கள், பேராசிரியர். உத்திராபதி அவர்கள், பேராசிரியர். வேலு அவர்கள், பேராசிரியர். பழனி அவர்கள், பேராசிரியர். பசுபதி அவர்கள், திருவாரூர் அரசுக்கல்லூரி பேராசிரியர். செந்தில் அவர்கள், காரைக்குடி அரசுக்கல்லூரி பேராசிரியர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள், பொன்னேரி அரசுக்கல்லூரி பேராசிரியர். திவாகர் அவர்கள், பேராசிரியர் நாகராஜன் அவர்கள், மேலும் பல ஆசிரியர்கள் ஆய்வாளர்கள்  என பலர் பங்கேற்று ஐயா அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

இறுதியில் ஏற்புரை வழங்கிய பேராசிரியர் சிவராமன் அவர்கள் நான் விருதுப் பெற்றதற்கு எங்கும் கிடைக்காத அளவிற்கு மகிழ்ச்சியும் அங்கீகாரமும் இங்கு கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் பார்வையற்றோர் எளிதில் கணிதத்தைப் புரிந்துக்கொள்ளும் வகையில் சிறந்த முறையில் ஒரு நூல் எழுதத் திட்டமிட்டுள்ளதாகவும் அது என் சமுதாயக் கடமை என்றும் ஆர்வமுடன் குறிப்பிட்டார்.  ஆய்வாளர். டேவிட்  அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. இவ்விழாவில் பங்கேற்க எனக்கு வாய்ப்பளித்த  விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் குமார் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் விருது பெற்றது தொடர்பாக தினமணி நாளிதழில் வெளியான செய்தி பின்வருமாறு....

அறிவியல் விழிப்புணர்வு :3 பேருக்கு தேசிய விருது

By சென்னை

First Published : 12 March 2016 03:44 AM IST

அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் தேசிய விருது வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் விழா புதுதில்லியில் அண்மையில் நடைபெற்றது. இதில், 11 பேருக்கு விருதுகளையும், ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளையும் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் வழங்கினார்.

அதில், தமிழகத்தைச் சேர்ந்த சென்னை து.கோ. வைணவக் கல்லூரியில் கணித பேராசிரியர், பை கணித மன்றத்தின் நிறுவனர் ரா.சிவராமன், ராஜபாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் கணேசன், திருசெங்கோடு கே.எஸ்.ஆர். தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியரான வெ.ராஜேந்திரன் ஆகியோருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இதில், சிவராமனின் பல கணித நூல்கள், தமிழக அரசின் சிறந்த அறிவியல் புத்தகப் பரிசை தொடர்ச்சியாக 2 முறையும், திருப்பூர் தமிழ்ச் சங்க விருது உள்ளிட்டவைகளை பெற்றுள்ளது. மேலும், கணிதத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் வகையில் சொற்பொழிவுகள், பயிலரங்கத்தையும் நடத்தியுள்ளார்.

http://www.dinamani.com/tamilnadu/2016/03/12/

உலக மகளிர் தின விழாவில் தமிழக ஆளுநரிடம் விருது பெற்ற பார்வையற்ற பெண்!


உலக மகளிர் தின விழாவில் தமிழக ஆளுநரிடம் விருது பெற்ற பார்வையற்ற பெண்!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சக்தி மண்டல் சகயோக் சார்பில் மகளிர் தினம் சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் மார்ச் 8ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில்  பல்துறை பெண்களுக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில் பார்வையற்ற சமூகத்திற்காக பல ஆண்டுகளாக தம் பங்களிப்பைச் செவ்வனே செய்துவரும் பார்வையற்ற பெண் செல்வி. முத்துச்செல்வி  அவர்களுக்கு சிறந்த  சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டது.

இவர், பார்வையற்றோருக்கான உரிமை, பாதுகாப்பு, இட ஒதுக்கீடு என்ர பிரச்சணைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். பெண்ணுரிமை, பெண் முன்னேற்றம் போன்றவற்றில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக அகிலஇந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பின் செயலாலராக செயலாற்றி வருகிறார். இவர் மெம்மேலும் பல சாதணைகள் புரிய எல்லாம் வள்ள இறைவன் அருள்புரியட்டும். வாழ்த்துகள்!

நன்றி...

செவ்வாய், 5 ஜனவரி, 2016

பார்வையற்றோர் வாழ்வில் 2015



பார்வையற்றோர் வாழ்வில் 2015

ரா. பாலகணேசன்,   அருப்புக்கோட்டை
  பார்வையற்றோர் வாழ்வில் 2015-இன் பங்களிப்பு எப்படி இருந்தது?
சுருக்கமான பின்னோட்டமாய் இக்கட்டுரை.

தமிழகம்

  *10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் முதல் 10 இடங்களைப் பெறும்  பார்வையற்றோர் குறித்த தகவல்களை அரசே தனது அறிவிக்கையில் வழங்கத் தொடங்கியது இந்த ஆண்டில்தான்.
  *கடந்த மார்ச் மாதம் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள்  சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. பல அரசியல் கட்சிகளும்,  சமூக அமைப்புகளும் போராட்டத்தை ஆதரித்தன. இருந்தபோதிலும், திடமான தீர்வு  இன்றியே போராட்டம் முடிவடைந்தது.
  *பார்வையற்றோருக்கான முதல் கல்வியியல் கல்லூரி சென்னை நேத்ரோதயா  நிறுவனத்தின் சார்பில் செயல்படத் தொடங்கியது.
  *தமிழகத்திலேயே முதல் முறையாக, தம் கல்லூரியில் பயிலும் பார்வையுள்ள மாணவர்களுக்கு பார்வையற்றோர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,சென்னை மாதனாங்குப்பம் பகுதியில் உள்ள சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் மகளிர்க் கல்லூரி, தேசிய பார்வையற்றோர் சங்கத்துடன் (NAB tamilnadu) இணைந்து பார்வையற்றோருக்கான தொழில்நுட்பக் கல்விக்கான சான்றிதழ் படிப்பைத் தொடங்கியது.
  *தமிழகத்தைச் சேர்ந்த பெனோசெபைன் என்ற பார்வையற்ற பெண் முதல்  பார்வையற்ற அதிகாரியாக இந்திய வெளியுறவுத் துறையில்  பொறுப்பேற்றுக்கொண்டார்.
  *கோயம்புத்தூரைச் சேர்ந்த சபரி வெங்கட் என்ற பார்வையற்ற சிறுவன் சிறந்த  மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருது பெற்றார். இவர் சிறந்த பேச்சாளர்,  பலகுரல் வித்தகர்.
  *தஞ்சாவூர், பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் உள்ள பார்வையற்றோர்  பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக மாணவர்கள் போராட்டம்  நடத்தினர். இதன் விளைவாக, சிறப்புப் பள்ளிகளில் உள்ள காலியிடங்களை  நிரப்பும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  *’பிரெயில் மஞ்சரிஎன்ற புதிய பிரெயில் இதழை மதுரை IAB பிரெயில்  அச்சகம் தொடங்கியுள்ளது.. அடுத்த ஆண்டில் பிரெயில் பார்வைஎன்ற  பெயரிலான இதழை மத்திய அரசு நிறுவனமான NIVH தென்மண்டல மையம்  வெளியிடவிருக்கிறது.
  *தமிழக வெள்ளப் பெருக்கு பார்வையற்றோரையும் வெகுவாக பாதித்தது. சென்னை  சிறுமலர் பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளி மாணவிகள் வெள்ளத்தின்போது  கடும் அவதிக்கு உள்ளாகினர். இசையமைப்பாளர் இளையராஜா இவர்களுக்கு உதவிய  செய்திகள் சமூக வலை தளங்களில் பாராட்டு பெற்றன.    பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் வெள்ளத்தில்  முற்றும் முழுதாகச் சேதமடைந்தது. சங்கத்தின் ஆவணங்கள், உபகரணங்கள்  முதலியவை பெருமளவில் அழிந்துவிட்டன.

இந்தியா

  *மத்திய அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்ட வகையில் இன்னும் 14327  மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக மத்திய  இணையமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்காலக்  கூட்டத்தொடரில் இத்தகவலை  அவர் வழங்கினார்.
  * நாடெங்கும் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ஒரே வகையான  நவீன அடையாள அட்டை வழங்கப்படும் எந மத்திய அரசு அறிவித்தது.
  *ஏப்ரல் 2017-க்குள் இந்திய அரசின் அனைத்து அலுவலகங்களும், பொதுத் துறை  நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகள் அணுகுவதற்கேற்ற வகையில் அமைக்கப்படும்  என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
  *பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு தொட்டுணரும் வரைபடங்களுடன்கூடிய  பிரெயில் புத்தகங்களை வழங்கும் திட்டத்தை NCERT தொடங்கியது.
  *சுற்றுலாத் தளங்கள் பார்வையற்றோருக்கு ஏற்றாற்போல் அமைக்கப்படவேண்டும்  என்ற இலக்கில், முதல்கட்டமாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சுற்றுலாத்  தலங்களில் பிரெயில் விவரணைகள் இந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  *ரயிலில் படுக்கை வசதி கேட்டு முன்பதிவு செய்யும்  மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ்ப் படுக்கையும், அவர்களது உதவியாளர்களுக்கு  நடுப் படுக்கையும் கட்டாயம் வழங்கப்படவேண்டும் என இந்திய ரயில்வே ஆணை  பிறப்பித்துள்ளது.
    *மைசூர் ரயில் நிலையம் மாற்றுத்திறனாளிகளுக்கேற்ற முதல் ரயில்  நிலையமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  *பார்வையற்றோர் தங்கள் சிக்கல்களையும், ஐயங்களையும் போக்கிக்கொள்ளும்  வண்ணம் இலவசத் தொலைபேசி ஆலோசனைச் சேவை இந்த ஆண்டில் தொடங்கப்பட்டது.  மத்திய அரசின் உதவியுடன் eyeway நிறுவனத்தால் நடத்தப்படும் இச்சேவையில்  பார்வையற்றவர்கள் எந்த இந்திய மொழியிலும் தங்கள் கேள்விகளைக் கேட்கலாம்.
தொலைபேசி எண்: 1800-300-20469.

நீதி

  *மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை உறுதியாக அமல்படுத்தவேண்டும்  என்ற நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இந்திய ரயில்வே, BSNL, நெய்வேலி  நிலக்கரி நிறுவனம் முதலியவை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு  வேலைவாய்ப்பு அறிவிப்புகளை விடுத்துள்ளன.
  *ஆசிரியர் பயிற்றுநர்கலாகப் பார்வையற்றவர்களை நியமிப்பது தொடர்பான  வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது கருத்துரையை வழங்கிய பள்ளிக்  கல்வித் துறை செயலர் திருமதி. சபிதா, ‘ பார்வையற்றவர்கலைச்  சராசரியானவர்களாகக் கருதமுடியாது; எனவே இப்பணியில் அவர்களை  நியமிக்கமுடியாதுஎன்று கூறிய கருத்துகளை நீதிமன்றம் கண்டித்தது.  சபிதாவின் இக்கருத்து பரவலாக கண்டனத்துக்குளானது.
  * பாண்டியன் கிராம வங்கியின் வேலை வாய்ப்பு அறிவிப்பில்  பார்வையற்றோருக்கான இடங்கள் குறித்த தகவல் இல்லாமல் இருந்ததை நீதிமன்றம் கண்டித்தது. டெல்லியைத் தலைமையகமாகக் கொண்ட AICB தொடுத்த வழக்கில் வங்கி  பார்வையற்றோருக்கான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
  *2008-ஆம் ஆண்டு பெரம்பலூரில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமில்  செய்யப்பட்ட தவறான அறுவை சிகிச்சை காரணமாக 66 பேர் பார்வையிழந்தனர். இது  தொடர்பான வழக்கில், தொடர்புடைய மருத்துவர்களுக்கும், மருத்துவமனை  நிர்வாகிகளுக்கும் ஓராண்டு சிறை தண்டனை அளித்து திருச்சி நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. தவறான சிகிச்சைக்கு எதிராக இந்திய அளவில் முதல்முறையாக  வழங்கப்பட்ட தீர்ப்பு இது.
  *சுரேந்திரமோகன் என்ற தமிழகப் பார்வையற்ற வழக்கறிஞருக்கு நீதிபதி பணி  தரப்படவேண்டும் என்ற தீர்ப்பும் இந்த ஆண்டில்தான் வெளியானது.
  *மதுரை அரசு மருத்துவமனையில் தங்கள் குழந்தையைத் தொலைத்த  முத்துமாணிக்கம், மாரீஸ்வரி இணையருக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு  நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ரூ. 3 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது.

அறிவியல் தொழில்நுட்பம்

   பார்வையற்றவர்களுக்குப் பார்வை தரும் பொருட்டும், தற்போதைய நிலையில்  தொழில்நுட்ப உதவி வழங்குவது குறித்தும் தொடர்ந்து ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  *பார்வையற்றோர் தானாக பணிபுரியும் வண்ணம் கட்டுமானக் கருவியைக்  கண்டறிந்தார் மதுரையைச் சேர்ந்த மனோகரன். இக்கருவியைப் பயன்படுத்துவது  குறித்து பல பார்வையற்றோருக்குப் பயிற்சியளித்துவருவதாக இவர்  தெரிவித்தார். உடலுழைப்பில் ஈடுபட விரும்பும் பார்வையற்றோருக்கு இது ஒரு  வரம்.
  *மீயொலி --முப்பரிமாண அச்சுக்கருவி (ultrasound 3d printer)இந்த ஆண்டு  கண்டுபிடிக்கப்பட்டது. பார்வையற்றோரால் காணமுடியாத பிம்பங்களுக்கு  (images) வடிவம் கொடுக்க இது உதவும். சான்றாக, பிரேசில் நாட்டில் கருவில்  இருக்கும் தன் குழந்தையின் உருவை ஒரு பார்வையற்ற தாய் தொட்டுணர்ந்த  செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
  கூகுல் நிறுவனம் தயாரித்த OCR-ல் தமிழ் இடம்பெற்றிருப்பது, கர்நாடக  மாநிலத்தில் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளுக்கான திரைவாசிப்பானின்  உருவாக்கம் ஆகியவை கணினி பயன்படுத்தும் தமிழ் பார்வையற்றோருக்குப்  பயன்படுபவை.
   கூகுல் நிறுவனம் தயாரித்த ஓட்டுநர் தேவையில்லாத காரை ஏற்றுக்கொள்வது  குறித்து பல நாடுகள் பரிசீலித்துவருகின்றன.
  இவை தவிர பார்வையற்றோர் கணினி, அலைபேசி ஆகியவற்றை எளிமையாகக் கையாள,  அவற்றின் மூலம் பல தகவல்களை விரைவாக அறிந்துகொள்ள பல்வேறு செயலிகள்  வெளியாகிவருகின்றன.

ஊடகம்

  *’கண்ணு தெரியலைண்ணா உலகத்தச் சுத்திப்பார்க்க முடியாதா தாத்தா?’ என்று  ஒரு பெண் கேட்பதாக வடிவமைக்கப்பட்ட VIP சூட்கேஸுக்கான விளம்பரம் இந்த  ஆண்டு வெளியாகி தன்னம்பிக்கையை வளர்த்தது.
  *ஸ்ரீராம் என்ற 10 வயதுச் சிறுவன் லோட்டஸ்நிய்யூஸ் தொலைக்காட்சியின்  சிறப்புச் செய்திவாசிப்பாளராக பணியமர்த்தப்பட்டார். பார்வையற்றோர்  கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு இம்முயற்சி எடுக்கப்பட்டதாக தொலைக்காட்சி  நிர்வாகம் கூறியது. சனிக்கிழமைதோறும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் அகக்கண்என்ற அரைமணிநேர நிகழ்ச்சியில் பிரெயில் முறையைப் பயன்படுத்தி  செய்தி வாசிக்கிறார் ஸ்ரீராம்.
  *விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்  பாட்டாலும், பலகுரல் வித்தையாலும் அனைவரது மனதிலும் இடம்பிடித்தார்  இர்வின் விக்டோரியா என்ற பார்வையற்றவர். முதன்மையான 10 (Top 10)  போட்டியாளர்களுள் ஒருவராக வந்த முதல் பார்வையற்றவர் இவர்.
  *பார்வையற்றவர்களைத் தலைமைப் பாத்திரங்களாகக் கொண்டு மெல்லத் திறந்தது  கதவுஎன்ற நாடகத் தொடரை z தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பிவருகிறது.  திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடர்  பார்வையற்றோர் வாழ்க்கை, அவர்கள் கல்வி பெறும் நிறுவனம் சார்ந்த அரசியல்  முதலியவற்றை அடிப்படைக் கதையாகக் கொண்டுள்ளது.

விளையாட்டு

  வழக்கம் போலவே இந்த ஆண்டும் பார்வையற்றோருக்கென பல விளையாட்டுப்  போட்டிகள் நடத்தப்பட்டன.
  *டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான பார்வையற்றோர் கிரிக்கெட்  போட்டியை Dd sports தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. இத்தகைய  போட்டிகலை நேரடியாக ஒளிபரப்புவது இதுவே முதல்முறை.
  *அடுத்த ஆண்டில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை  கிரிக்கெட் போட்டிகளில் பாதுகாப்புக் காரணங்களால் தங்களால்  கலந்துகொள்ளமுடியாது என பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி  அறிவித்தது துரதிஷ்டவசமானது.

இறப்புகள்

  *இந்திய நாடாளுமன்றத்தின் முதல் பார்வையற்ற உறுப்பினரான சதன் குப்தா  இந்த ஆண்டு காலமானார். வயது 98. மேற்குவங்கத்தைச் சேர்ந்த இவர்  பொதுவுடைமை இயக்க ஆர்வலர்.
  *பார்வையற்ற ஹிந்தி திரையுலக இசையமைப்பாளர் ரவீந்திர ஜெய்ன் இந்த ஆண்டு  காலமானார். இவர் பாடலாசிரியராகவும், பாடகராகவும் புகழ் பெற்றவர்.  தெனிந்தியப் பாடகர் K.J. ஜேசுதாஸ் அவர்களை ஹிந்தி திரையுலகிற்கு  அறிமுகப்படுத்தியவர் இவர்.
  *பழம்பெரும் தமிழ் பக்திப் பாடகர் பித்துக்குலி முருகதாஸ் காலமானார்.  இவர் ஒரு கண் பார்வையை இழந்தவர்.

எதிர்பார்ப்பு

  ஐநா வடிவமைத்துத் தந்த UNCRPD-யை அடிப்படயாகக் கொண்ட  மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டம் அடுத்த ஆண்டாவது நிறைவேற்றப்படும்  என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு மாற்றுத்திறனாளியிடமும் இருக்கிறது.

  (குறிப்பு: கட்டுரையில் புள்ளிவிவரக் குறைபாடுகள் இருப்பின், வேறு  விஷயங்கள் விடுபட்டிருப்பின் பதிவர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன். பதிவுகள்  அவசியம்தானே!)
கட்டுரை முழுமை பெற உதவிய கவிஞர் சுகுமாரன், பொன். சக்திவேல், பொன்.  குமரவேல், J. யோகேஷ், அலகாபாத் வங்கிப் பணியாளர் முத்துச்செல்வி, சென்னை பேரா. பாண்டியராஜ் ஆகியோருக்கு என் நன்றிகள்.