வியாழன், 8 செப்டம்பர், 2016

அந்தகக்கவிப் பேரவை



அந்தகக்கவிப் பேரவை

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
பார்வையற்றோர் தங்கள் தமிழறிவை மேம்படுத்திக்கொள்ளும் பொருட்டு இப்பேரவை உருபெற்றுள்ளது. எழுத்தாற்றல் பேச்சாற்றல் ஆய்வுத்திறன் மற்றும் தமிழ்நுட்பத்திறன் போன்றவற்றில் தங்களை வளர்த்துக்கொள்ள, தங்களைத் தாங்களே பயிற்றுவித்துக்கொள்ள தோன்றியது அந்தகக்கவிப் பேரவை. இப்பேரவை உருவான விதம் பின்வருமாறு.
பல ஆண்டுகளாக சத்யசாய் பக்தர்கள்  வள்ளுவர் கோட்டத்தின் அருகில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பார்வையற்றோருக்கு புத்தகங்களை  வாசித்தும், ஒலிப்பதிவு செய்தும் வழங்கி வருவதை அனைவரும் அறிவோம். இச்சேவையின் மூலம் பயன்பெற்று உயர்ந்தநிலையை அடைந்தவர்கள் பலர். இந்த வாசிப்பகத்திற்கு சென்று பயன்பெற்ற சிலர், வாசிப்பகம் முடிந்ததும்  சிறுக்கூட்டமாக கூடி இலக்கியம் உள்ளிட்ட பல செய்திகளைக் கலந்துரையாடி வந்தனர். இப்படி பல செய்திகளை வரையறையின்றி  பேசுவதற்கு பதிலாக  முறையான கூட்டமாக நெறிப்படுத்தி கலந்துரையாடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் விளைவாக தோன்றியதே அந்தகக்கவிப் பேரவை. இப்பேரவைக்கு அந்தகக்கவிப் பேரவை என்று பெயரிட காரணம் என்ன என்பதை இனி காண்போம்.
தொல்காப்பியன், வள்ளுவன் கம்பன், பாரதி என தமிழை வளர்த்தெடுத்து நிலைநிறுத்தியப் புலவர்கள் பலரும் வான்முட்டும் புகழ்ப்பெற்று வாழ்ந்து வருகின்றனர். அந்த  அளவிற்கு இல்லை என்றாலும் எங்கள் அந்தகக்கவியை ஓரளவேனும் நினைவில் இருத்தி, அவரை உயர்த்தி பார்வையற்றோரை தமிழ் உலகிற்கு அடையாளப்படுத்தும் பொருட்டு இப்பெயர் இடப்பட்டது. அந்தகக்கவி வீரராகவ முதலியார் குறித்த சில குறிப்புகள் பின்வருமாறு.
·         இவர் தொண்டை நாட்டில் பிறந்தவர்.
·         பிறவியிலேயே பார்வையற்றவர்.
·         முதுகில் எழுதச்சொல்லிக் கற்றவர்.
·         கவிஞர், இசைஞானம் உள்ளவர், ஆசிரியர்.
·         பிள்ளைத்தமிழ், கலம்பகம், உலா, கோவை போன்ற இலக்கியங்களைப் படைத்தவர்.
·         இலங்கைக்கு சென்று அரசன் பரராசசிங்கனிடம்  தம் கவிதைக்காக பரிசுகள் பெற்று வந்தவர்.
·         இவர் பாடிய நூல்கள்
1. திருக்கழுக்குன்றப் புராணம்
2. திருக்கழுக்குன்ற மாலை
3. சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
4. திருவாரூர் உலா.
5. சந்திரவாணன் கோவை
மற்றும் பல தனிப்பாடல்கள்.

பேரவையின் செயல்பாடுகளாவன, ஒவ்வொரு மாதமும் ஒருவர் அவருக்கு விருப்பமான தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்க, மற்றவர்கள் அதில் தோன்றும் ஐயங்களை எழுப்பித் தெளிவு பெறுதல், புதிய நூல்கலை அறிமுகம் செய்தல், பல்துறை தமிழ் அறிஞர்களை அழைத்து துறைசார்ந்த அறிவை விரிவு செய்தல் என்ற முறைமைகளில் கூட்டங்கள் நடைபெறும்.
கூட்டங்கள்  கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள், கடற்கரைகள் என ஏதேனும் ஒரு இடத்தில் நடைபெறும். இடம் குறித்தத் தகவல் அவ்வப்போது அறிவிக்கப்படும். முதல் கூட்டம் ஆகஸ்ட் 28 2016 ஞாயிற்றுக் கிழமை 1.30 மணி முதல் 3.30 மணி வரை பத்மசேஷாத்ரி பள்ளியின் அருகில் ஓர் மரத்தடியில் நடைபெற்றது.
மாநிலக்கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளர் திரு.சக்திவேல், செய்யாறு அரசுக் கல்லூரியில் விருந்தமை விரிவுரையாளராக உள்ள திரு. பிரதீப், மதுரவாயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழாசிரியராக உள்ள திரு. ராமன், ராணிமேரிக்கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் திரு.சுதன்,,, உத்திரமேரூர் அரசுக் கல்லூரி விருந்தமை விரிவுரையாளர் திரு. பானுகோபன், மாநிலக்கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் திரு.செல்வமணி, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியர் திரு.பாண்டியராஜ், ராணிமேரிக்கல்லூரி முனைவர் பட்ட  ஆய்வாளர் திரு. லட்சுமிநாராயணன், ராணிமேரிக்கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி.வத்சலா லட்சுமிநாராயணன், திருவஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைப் பட்டதாரி தமிழாசிரியர் திரு.வெங்கடேசன், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முனைவர் பட்ட ஆய்வாளர் திரு.சிவக்குமார் போன்றோர் இணைந்து இப்பேரவையைத் தொடங்கியுள்ளனர். அனைவரும் தமிழ்த்துறையினர் என்பதுக் குறிப்பிடத்தக்கது. திரு. பிரதீப் தலைவராகவும், திரு.ராமன் செயலாளராகவும், திருமதி.வத்சலா பொருளாளராகவும் செயல்படுகின்றனர்.
அனைவரும் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.