ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

அருள்மிகு அண்ணா நூற்றாண்டு நூலகம்




அறிவு பசியோடு அலைந்து திரியும் அனைவருக்கும் அடைக்கலம் தரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள், அறிஞர் அண்ணாவின் 102 ஆவது பிறந்த நாள் அன்று, அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால், அனைவரும் பயன்படுத்தும் வகையில் இன் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
ஒன்பது தளங்களைக் கொண்ட இந்த நூலகம், சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு; மெய்ப்புல அறைகூவலர் பிரிவு; நாளிதழ்கள் பிரிவு; குழந்தைகள் பிரிவு; தமிழ் நூல்கள் பிரிவு, ஆங்கில நூல்கள் பிரிவு என பகுக்கப்பட்டுள்ளன. இப்பிரிவுகளில் அனைத்து துறைகள் சார்ந்த புத்தகங்களும் அழகாக தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நூலகம், உலகின் முக்கிய மின் நூலகங்களோடு இணைக்கப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும். கணினி மயமாக்கப்பட்ட இந்த நூலகம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
மெய்ப்புல அறைகூவலர் பிரிவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் உறுப்பினராக உள்ளனர். பார்வையற்றோர் பயன்பெறும் வகையில் பல பிரெயில் புத்தகங்களும், ஒலி புத்தகங்களும், மின் புத்தகங்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், பார்வையற்றோர் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பயன் பெறும் வகையில், brailleacl@googlegroups.com என்ற மின் மடல் குழுமம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குழுமத்தில், பார்வையற்றோருக்கான செய்திகள் மற்றும் சலுகைகள், தினமணி மற்றும் இந்து நாளிதழ், வார மாத இதழ்கள், பார்வையற்றோருக்கான வேலை வாய்ப்பு தகவல்கள், கல்வி தொடர்பான தகவல்கள்  போன்றவை பகிரப்படுகின்றன. மேலும் பார்வையற்றோர் பலர் இதில் இணைந்து தங்களுக்குரிய அறிவார்ந்த ஐயங்களை பகிர்ந்து விவாதித்து பயன்பெற்று வருகின்றனர். மேலும், நூலக அலுவலர்கள் மற்றும் இப்பிரிவில் பணி புரியும் நூலகர்கள், வேலைவாய்ப்பிற்காகவும், மேல்படிப்பிற்காகவும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் பார்வையற்றோருக்காக ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தருதல், தேர்விற்கான தகவல்களையும் புத்தகங்களையும் இணையத்திலிருந்து பெற்றுத் தருதல் போன்ற சிறந்த சேவைகளை செய்து வருகின்றனர்.
இந்த நூலகத்தின் காவலர்களும் மற்ற பணியாளர்களும், பார்வையற்றோர் நூலகத்திற்கு வருவதை பார்த்த உடனேயே விரைந்து வந்து அழைத்து செல்கின்றனர்.  இந்த நூலகத்தின் அனைத்து பிரிவு நூலகர்களுமே பார்வையற்றோருக்கு சிறந்த வாசிப்பாளர்களாகவும் நல்ல உதவியாளர்களாகவும் இருந்து சேவை செய்து வருகின்றனர். இந்த மெய்ப்புல அறைகூவலர் பிரிவு இந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் அகேட் இன்ஃபோடெக் நிறுவனத்தின் இயக்குனர் திரு. சங்கர் ஐயா ஆவார். அவரது பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இவர் தானாகவே முன் வந்து பல உதவிகளை செய்து வருகிறார். நானும் எனது நண்பர் திரு. சுதன் அவர்களும் முதல் முதலில் இந்த நூலகத்திற்கு வந்தபோது, எங்களை இன் முகத்தோடு வரவேற்று நூலகத்தின் சிறப்பினையும் அங்கு உள்ள வசதிகளையும் எடுத்துரைத்தவர் இவர்தான். இந்த நேரத்தில் அவருக்கும், அனைத்து நூலகர்களுக்கும், நூலக அலுவலகர்களுக்கும், மற்ற பணியாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலே நூலகத்தின் பெயரை குறிப்பிடும் போது அருள் மிகு என்று குறிப்பிட்டிருந்தேன். பொதுவாக அறுள்மிகு என்ற சொல் தெய்வங்களை குறிப்பிடும் போதும், ஆலய பெயர்களை குறிப்பிடும் போதுமே பயன்படுத்தப்படுவது வழக்கம். ஒரு முறை சொல்வேந்தர் திரு. சுகி. சிவம் ஐயா அவர்கள் அன்பிற்கும் அருளிற்கும் உள்ள வேறுபாட்டை பின் வருமாறு விளக்கினார். அன்பு என்பது பல நிலைகளில் வேறுபடும், அது ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது. ஆனால் அருள் என்பது அப்படியல்ல. அது ஓர் அறிவு உயிர் முதல் அனைத்தின் மீதும் ஒரே மாதிரியாக கருணை காட்டுவது என்று கூறினார். அதுபோல எந்த வித வேறுபாடும் இன்றி அறிவு தேடல் உள்ள அனைவருக்கும் பயனளிக்கும் நூலகத்தை அருள்மிகு என்று சுட்டுவது சரியாக இருக்கும் என்பதாலேயே அருல்மிகு அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று குறிப்பிட்டேன். என்னை பொருத்த வரை அறிவு பசியைத் தீர்க்கும் நூலகமும், இறைவன் குடியிருக்கும் ஆலயமும் ஒன்றே ஆகும். அறிவு பசியை அல்லது மனதில் உள்ள அழுக்கை நீக்கும் ஒவ்வொரு சிறந்த புத்தகங்களுமே தெய்வங்களாகும். அதனை நன்றாக பராமரித்து வரும் நூலகர்களே அர்ச்சகர்கள். தினந்தோறும் ஆலயம் செல்வது போல கூடுமான வரை நூலகம் செல்வோம்.
நன்றி...

புதன், 11 செப்டம்பர், 2013

பார்வையற்றோருக்கான கணினி பயிலரங்கம்



அன்புடையீர் வணக்கம்,
      சென்னையில் கடந்த எட்டு ஆண்டுகளாக பார்வை மாற்றுத் திறனாளிகளுக்காக  வாசிப்பகம் நடத்துதல், கல்விக் கட்டணம் வழங்குதல்,  உள்ளிட்ட பல சேவைகளை புரிந்து வரும் ப்ரேர்னா அமைப்பைப் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள். தற்போது இவ்வமைப்பு,  ஏழை மக்களுக்காகவும், மாற்றுத் திறனாளிகளுக்காகவும், முதியோர்களுக்காகவும் பல சேவைகளை செய்து வரும்  அரிமா சங்கத்துடன் இணைந்து, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று நாள் கணினி பயிலரங்கம் ஒன்றை வரும் 27/09/2013 முதல் 29/09/2013 வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இப்பயிலரங்கில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், வரும் 20/09/2013குல், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணில் தொடர்புக்கொண்டு முன் பதிவு செய்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். முதலில் பதிவு செய்யும் 100 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கணினியைக் கற்க விருப்பம் உள்ள அனைவரும் இப்பயிலரங்கில் பங்கேற்கலாம். கணினியில் ஓரளவிற்காவது விசைப்பலகையை பயன்படுத்த அறிந்திருத்தல் அவசியம். இப்பயிலரங்கத்தில் அமர்வுகள் விரிவுரை மற்றும் செய்முறை  முறையில் அமைக்கப்பட உள்ளன. எனவே, மடிக்கணினி வைத்திருப்போர் கொண்டு வரலாம், மடிக்கணினிக் கொண்டுவர இயலாதவர்கள், பயிற்றுனர்கள் விலக்கும் முறையை கவனித்து பயன் பெறலாம்.
நடைபெறும் இடம் : கோல பெருமாள் பள்ளி, டி.ஜி வைஷ்ணவா கல்லூரி அருகில், அரும்பாக்கம், சென்னை.
நேரம் : காலை 09.00 முதல் மாலை 05.00 வரை
இப்பயிலரங்கம்,, அடிப்படைக் கணினி பயன்பாடு, மைக்ரோசாஃப்ட் வேட், மைக்ரோசாஃப்ட் எக்சல், மின் அஞ்சல் மற்றும் இணைய பயன்பாடு, ஆடியோ எடிட்டிங், பள்ளி கல்லூரிகளில் கணினி பயன்பாடு, அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் கணினி பயன்பாடு போன்ற தலைப்புகளில் நடத்தப்பட உள்ளன.
பயிலரங்க அமர்வுகள்
முதல் நாள்:
1.      அடிப்படை கணினி பயிற்சி மற்றும் மைக்ரோசாஃப்ப்ட் வேட்
திரு. S. பாண்டியராஜ், ஆய்வு மாணவன், தமிழ்த் துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
2.      என் வி டி ஏ பயன்பாடு
திரு. நவரசன் M.A மாணவர், ஆங்கிலத் துறை, மாநிலக் கல்லூரி,               சென்னை.
3.      கணினியில் தமிழ் பயன்பாடு
Dr S.  திவாகர், பேராசிரியர், தமிழ்த் துறை, இராணி மேரி கல்லூரி, சென்னை.
4.      மைக்ரோசாஃப்ட் எக்சல்
திரு. வெற்றிவேல் முருகன், Ph.D ஸ்காலர், தி நியு ஸ்கூல் ஃபார் சோசியல் ரிஸேர்ச் நியுயார்க், அமெரிக்கா.
இரண்டாம் நாள்:
5.      இணையம் பகுதி – 1.
திரு. யு. மகேந்திரன், Ph.D ஸ்காலர், ஆங்கிலத் துறை,   பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்.
6.      இணையம் பகுதி – 2
திரு. நாகராஜன், கணினி பயிற்றுனர், இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை.
7.      இணையம் பகுதி – 3
திரு. முருகானந்தம் Ph.D ஸ்காலர், ஆங்கிலத் துறை,  பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்.
8.      கணினி மேலாண்மை
திரு. ராதாக்ருஷ்ணன், தமிழ் ஆசிரியர், அரசு பள்ளி, கள்ளக்குரிச்சி.  
9.      ஆடியோ எடிட்டிங்
திரு எம். பார்த்திபன், கெனரா பேங்க், சென்னை.
மூன்றாம் நாள்:
10.   அரசு அலுவலகங்களில் கணினி & OCR பயன்பாடு
திரு. B. கண்ணன், நியு இன்டியா அசுரன்ஸ், சென்னை.
11.   வங்கிகளில் கணினி பயன்பாடு
திரு. D. மணி, துணை மேலாளர், இந்தியன் ஓவர்சிஸ் பேங்க், மண்டல அலுவலகம் 2, சென்னை.
12.   பள்ளி மற்றும் கல்லூரிகளில் கணினி பயன்பாடு
திரு. சபாஷ்ராஜ், தமிழ் ஆசிரியர், கடலூர்.
13.   பார்வையற்றோருக்கான கணினி சார் பணிகள்
திரு. S. சங்கர், இயக்குனர், அகேட் இன்ஃபோடெக் நிறுவனம் சென்னை.
14.   வினா விடை பகுதி.

தொடர்புக்கொள்ள வேண்டிய எண்:
திருமதி. பத்மா 94 44 28 74 63
பாண்டியராஜ் 98 41 12 91 63
நன்றி...

திங்கள், 9 செப்டம்பர், 2013

கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களது 114 ஆவது பிறந்த நாள்



சிறந்த எழுத்தாளர், சுதந்திர போராட்ட வீரர், தமிழிசை வளர்ச்சிக்காக பாடுப்பட்டவர், பத்திரிக்கை ஆசிரியர் என்ற சிறப்புக்களை உடைய அமரர். கல்கி அவர்கள்  தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து, சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் ஆவார். இவர் 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் நாள், தஞ்சாவூரில் பிறந்தார். 114 ஆண்டுகளுக்கு பிறகும் இவரது எழுத்துக்கள் வாசகர் மனதில் தனி இடம் பிடித்துள்ளன. இவர் எழுதிய சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், புத்தகங்கள் என அனைத்தும் புது பொளிவுடன், காலத்துக்கேற்ற கருத்துக்களை, தமிழ் சமுதாயத்திற்கு அளித்து வருகின்றன என்று சொன்னால் மிகையாகாது. இவர் எழுதிய பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், கல்வனின் காதலி, தியாக பூமி, அலை ஓசை போன்ற நூல்கள் இன்று வரை வாசகர்களால் அதிக அளவில் விரும்பி வாசிக்கப்படும் நூல்களாகும். இவரது பல நூல்களும் கட்டுரைகளும், பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பல சிறப்புகளுக்கு சொந்தக்காரரான அமரர் கல்கி அவர்கள், 1954 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் இயற்கை எய்தினார். இவரது புத்தகங்கள் 1998 ஆம் ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்டன. இவருடைய புத்தகங்களை படிக்க விரும்புவோர் http://www.projectmadurai.org/ என்ற இணைய முகவரியில் சென்று பயன்பெறலாம்.

சனி, 7 செப்டம்பர், 2013

உலக எழுத்தறிவு தினம்



'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
எழுத்தறிவின்மையை போக்கும் பொருட்டு,, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் எட்டாம் தேதி, உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது. அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கில், 1965 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நான், யுனெஸ்கோ நிறுவனம், செப்டம்பர் எட்டாம் தேதியை உலக எழுத்தறிவு நாளாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டு முதல் உலக எழுத்தறிவு தினம், அனைத்து நாட்டு மக்களாலும் கொண்டாடப்பட்டு வறுகிறது.உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் எழுத்தறிவு பெறுதலின் அவசியத்தினை உணர்த்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
உலகில் உள்ள ஒவொரு நாடும் தனது நாட்டில் எழுத்தறிவில்லாத அனைவரும் எழுத்தறிவு பெறும் வகையில், முதியோர் கல்வி, இரவு பள்ளி, அறிவொளி இயக்கம், கட்டாய அடிப்படைக் கல்வி போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
மேதகு முன்னால் குடியரசு தலைவர், அப்துல்கலாம் ஐயா அவர்கள் சொன்னது போல, நாம் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேருக்காவது எழுத்தறிவித்தால், நாட்டில் எழுத்தறிவின்மை என்பதே இருக்காது. எனவே, இன்நன் நாளில் கூடுமான வரை குறைந்த பட்சம் எழுத்தறிவில்லாத ஐந்து பேருக்காவது எழுத்தறிவின் அவசியத்தை உணர்த்தி, கற்பிக்க உறுதி எடுப்போம்.