கோவை இளஞ்சூரியன் என்கிற திருக்குறள் பொன்னுசாமி ஐயா
அவர்களுடைய தேனூறும் திருவாசகமும் வான்புகழ் வள்ளுவமும் என்ற நூலினைப் படித்து, மலரில் தேனுண்ட
வண்டுகள் மயங்கிக் கிடப்பது போல, மனமுருகி மயங்கி மகிழ்ந்து திளைத்தேன். திருவாசகம் என்னும்
தேனில் திருக்குறள் என்னும் கனிகளைத் தோய்த்து நம்மைச் சுவைக்கச் செய்துள்ள பாங்கு
போற்றுதற்குரியது.
தனது ஏழாவது வயதில் மஞ்சள் காமாலையால் கண் பார்வையை முழுமையாக இழந்த திருக்குறள் பொன்னுசாமி ஐயா அவர்கள், பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்துள்ளார். போதிய வழிகாட்டுதல் இன்மை, பொருளாதார வசதியின்மை போன்றவற்றால் இவரால் கல்லூரி கல்வியைத் தொடர இயலாமல் போனது.
திருக்குறள் பொன்னுசாமி அவர்களின் புகைப்படம்
1981-ஆம் ஆண்டு ஓர்
பஞ்சாலையில் பணிக்குச் சேர்ந்தவர் 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். ஏறக்குறைய கடந்த 45 ஆண்டுகளாக உடன்
பணிபுரிந்த நண்பர்கள் சிலரின் உதவியுடனும், வானொலி உதவியுடனும், பிரெயில் புத்தகங்கள் மூலமாகவும் தானே முயன்று கற்று, உதடுகள் ஒட்டாத
திருக்குறள் எத்தனை, திருவள்ளுவர்
திருக்குறளில் எத்தனை இடங்களில் தேவர், கயவர், சான்றோர் போன்ற உயர்திணைகளையும்; யானை, புலி போன்ற
விலங்குகளையும்; காகம், மயில் போன்ற
பறவைகளையும் உவமையாகப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறித்து ஆழமான ஆய்வினை
மேற்கொண்டு, கல்லூரி
மாணவர்களிடையேயும், வானொலி போன்ற
ஊடகங்களிலும் தொடர்ந்து ஆய்வுரை நிகழ்த்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு
அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் உரை வழங்கியுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இப்படித் திருக்குறளில் ஆழங்கால்பட்ட இவர், திருவாசகத்தால்
ஈர்க்கப்பட்டுத் திருவாசகத்தில் தனது ஆய்வை மேற்கொள்ளத் தொடங்கியதன் விளைவாக, மாணிக்கவாசகர்
தன்னைத் தாழ்த்திப் பணிந்திடப் பல பாடல்களில் தன்னை 'நாயேன்' என்று
குறிப்பிட்டுப் பாடியதைக் கண்டதும் அதையே ஓர் ஆய்வாக மேற்கொண்டுள்ளார்.
திருவாசகத்தில் எத்தனை இடங்களில் 'நாய்' என்ற சொல் வருகிறது என்று குறிப்பெடுத்து, அந்தப்
பாடல்களைத் தொகுத்து வரிசைப்படுத்தி அதற்குப் பொருள் வழங்கி, 'நாயேனைத்
தன்னடிகள் பாடுவித்த நாயகன்' என்ற பொருண்மையில் வடிவமைத்துள்ளார்.
· நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
· தான் அந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
· கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
· நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்
·
செய்வது
அறியாச் சிறுநாயேன் செம்பொற் பாதமலர் காணாப்
இப்படி மாணிக்கவாசகர் தன்னை 'நாயேன்' என்று தாழ்த்திப் பணிந்து போற்றிப் பாடிய பாடல்களைத்
தொகுத்துப் பொருளுடன் அறியத் தந்துள்ள ஆசிரியரின் முயற்சி போற்றுதற்குரியது.
மேலும், திருக்குறளில் 'நாய்' என்ற சொல்லை
வள்ளுவப் பேராசான் பயன்படுத்தியுள்ளாரா என்பதையும் ஆய்ந்து நமக்கு அறியத்
தந்துள்ளார். திருவாசகத்தில் 'நாய்' என்ற சொல் இடம்பெறாத பதிகங்களில் உள்ள தெரிவு செய்த
பாடல்களோடு திருக்குறளை ஒப்பிட்டுப் பொருளுரைத்துள்ள பாங்கு நம்மை வியக்கச்
செய்கிறது.
நூலின் முகப்பு படம்
செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
இப்பதிகத்தில்
மாணிக்கவாசகர் தீவினைகளிலிருந்து விடுபட்டு, மெய்யுணர்வினை
இறையருளால் பெற்று பிறப்பு அறுபட உதவியதாகக்கூறுகிறார்.
திருக்குறளில்
திருவள்ளுவர், ஒருவனுடைய உள்ளம்
உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு
மீண்டும் பிறப்பு உள்ளதென எண்ண வேண்டாம் ”, என்கிறார்.
ஓர்த்துள்ளம்
உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
குறள் 357.
செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.
மாணிக்கவாசகர் இங்கு “ பழுத்த மனத்தடியார் ” என்று
மெய்யடியாரையும் தன்னை “ அழுக்கு மனத்தடியேன் ” என்றும் குறிப்பிட்டு,மனதில் அழுக்கான
மாசு இருந்தால், தான் மெய்யடியாரோடு சேர இயலாத நிலையைத் தெரிவித்துள்ளார்.
திருக்குறளில்
திருவள்ளுவரும், " தன் மனதில் மாசு இல்லாமல் இருந்தால்தான், அறச்செயலைச்
செய்திட இயலும் ”, என்கிறார்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
குறள் 34.
இப்படித் தேனூறும் திருவாசகத்தையும் வான்புகழ்
வள்ளுவத்தையும் ஒருசேரச் சமைத்து விருந்து படைத்திட்ட ஆசிரியரின் ஆய்வுப் பணி
மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்! என்று சொல்லி வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.
இந்த புத்தகம் சென்னை புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 514, 515 (தமிழ் மண்
பதிப்பகம்) மற்றும் பார்வையற்ற படைப்பாளர்களின் படைப்புகள் மற்றும் தொழில்நுட்ப
வளர்ச்சியைப் பறைசாற்றும் அரங்கு எண் 659-ல் கிடைக்கும்.
நூல் வெளியீட்டு விழா சிறப்புரை
நூலின் ஆசிரியர் திருக்குறள் பொன்னுசாமி அவர்களைத் தொடர்பு
கொள்ள – 9655440080
நன்றி.
இவண்
சேதுபாண்டி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக